
காட்டு யானைகளால் வீடு சேதம்
-மூதூர் நிருபர்-
மூதூர் – வீரமாநகர் கிராமத்திற்குள் நேற்று திங்கட்கிழமை இரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது தகரக் கொட்டில் வீடொன்றை உடைத்து சேதம் விளைவித்துள்ளதோடு அவ் வீட்டிலிருந்த நெல் மூடையினை வெளியில் இழுத்து உண்டுள்ளது.
வாழை மரங்களுக்கும் காட்டு யானைகள் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இரவு வேளையில் வீடுகளில் தூங்க முடியாதுள்ளதோடு, சிறுவர்களை வீட்டில் வைத்திருப்பதும் அச்சமாக உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றன.
வீட்டினை காட்டு யானை உடைத்ததால் தங்குவதற்கு இடமில்லையெனவும் இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு உதவிகளை பெற்றுத் தர வேண்டும் எனவும் மூதூர் – வீரமாநகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.