
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள்
-யாழ் நிருபர்-
கடந்த ஐந்து வருடங்களாக இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் பட்டத்தினை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இது வரையில் உரிய முறையில் அரச நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தினை சேர்ந்த மருந்தகவியல், தாதியியல், மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானவியல், இயன் மருத்துவம் மற்றும் ஊடு கதிர் படம் எடுப்பு போன்ற பிரிவுகளைச் சேர்ந்த முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் வருட மாணவர்களே போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நான்கு வருட கற்கை நெறியினையும் ஆறு மாத உள்ளக பயிற்சியும் வழங்கப்பட்டு அரச வைத்தியசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனாலும் யாழ்ப்பாணம், றுகுணு, பேராதனை கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் மேற்படி நான்கு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களில் இதுவரை 445 மருந்தகவியலாளர்கள் 450 மருத்துவ ஆய்வுகூடவியலாளர்கள், 750 தாதியர்கள், 105 ஊடு கதிர் படமெடுப்புவியலாளர்கள், 180 இயன் மருத்துவர்கள் தமது பட்ட படிப்பை முடித்து உள்ளக பயிற்சிக்காக காத்திருக்கின்றனர்.
ஆனாலும் இவர்களுக்காக 11 ஆம் திகதி ஜூன் மாதம் 2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய மேற்படி பட்டதாரிகளினால் உரிய விண்ணப்பங்கள் பூரண படுத்தப்பட்டு சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவை தொடர்பான பூரணமான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து இன்று வரை இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் உள்ளக பயிற்சிக்கு உள்வாங்கப்படாமலும் அரச நியமனம் வழங்கப்படாமலும் பல வருடங்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர். எனினும் இதே காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட துறைகளை ஒத்த டிப்ளமா கற்கைகள் பூர்த்தி செய்தவர்களுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது பாரபட்சமான செயலாகும் எனவே இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து வெளியேறி அரச நியமனங்களுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் நோக்கத்தினையும் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மேற்படி பீடத்தினை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பிரதான நுழைவாயிலில் ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பரமேஸ்வரா சந்தியை அடைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை அடைந்து அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

