“கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் கட்டாய உரிமையாகும்”

“சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறும் உரிமை உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது.

சிறுவர் தொழிலாளர்கள் என்பது  சிறுவர்களுக்கெதிராக பிரயோகிக்கப்படும் வன்முறைகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.

வேலையில் ஈடுபடுத்தப்படும் 5 தொடக்கம் 17 வயதிற்குட்பட்டர்களையே சர்வதேச தொழிலாளர் அமைப்பு சிறுவர் தொழிலாளர் என வரையறுத்துள்ளது.

சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலமாகவே ஒரு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்.

கல்வி கற்க வேண்டும் என கனவுகளொடு இருக்கும் பல சிறுவர்கள் குடும்ப பொருளாதார நிலை காரணமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

கல்வி கற்க வேண்டிய வயதில் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் உடல் ரீதியாக, உள அல்லது மனரீதியாக, உணர்வு ரீதியாக மற்றும் சமூகரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

சிறு வயதில் கல்வி அறிவை பெறாமல் வறுமை காரணமாக தொழில் செய்ய நிர்பந்திக்கப்படும் சிறுவர்கள் அவர்கள் வளர்ந்த பின்பும் சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்து விட முடியாமல் அடி மட்டத்திலேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

சிறுவர்களின் மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிலும் பொது அறிவிலும் தங்கியுள்ளது.

அந்த வகையில் உரிய வகையில் கல்வியை பெறாத சிறுவர்கள் தவறான வழிகளில் வாழ்க்கையை இலகுவில் கொண்டு செல்ல முனைவார்கள். இவை சிறுவர் சீர்திருத்த பாடசாலைகளில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கின்றது.

வறுமையால் ஊட்டச்சத்துள்ள உணவிண்மை, வேலையில் உடல்ரீதியாக அதிக பாரத்தை சுமந்து இருத்தல், தனிமை, என பல விடயங்கள் சிறுவர் தொழிலாளர்களாக இருக்கும் சிறுவர்களை பாதிக்கின்றது.

இந்த வகையில் உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதன்படி. இலங்கையில் 8 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளனர், அவர்களில் 184,000க்கும் மேற்பட்டோர் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.

“கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் கட்டாய உரிமையாகும்”