
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம்” என்று ஒன்றும் இல்லை!
-அம்பாறை நிருபர்-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை, ஜனாதிபதி அநுரகுமார, தமிழ் கூட்டமைப்பினரிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கியன் கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவுபடுத்த வேண்டும், என உலமா கட்சித் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போது உலமா கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை, அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே சொல்லியுள்ளனர், 2020ம் ஆண்டு பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா இக்கோரிகையை முன் வைத்த போது, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உலமா கட்சித்தலைவர் இது சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்தை கேட்காமல் முடிவுக்கு வரவேண்டாம் என தெரிவித்ததை மஹிந்த ராஜபச ஏற்றிருந்தார்.
இத்தனைக்கும் மஹிந்தவிக்கு எந்த தேர்தலிலும் கல்முனை முஸ்லிம்களில் 20 வீதத்துக்கு மேல் வாக்கு போட்டதில்லை, அது போல் பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பேச தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்பட்ட போது அது பற்றி பேச வேண்டாம் என அவர் உறுதிபட கூறியிருந்தார், இந்த பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கல்முனைத்தொகுதி முஸ்லிம்களில் 70 வீதமானோர் வாக்கு போட்டதுடன் கல்முனை தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற உலமா கட்சி உட்பட பலரும் உதவியுள்ளனர்.
ஆகவே கல்முனையை வடக்கு கிழக்கு என்றோ தமிழ் செயலகம் முஸ்லிம் செயலகம் என்றோ இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம், தமிழர்கள் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், கல்முனை செயலகம் சம்பந்தமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றில் பேசுவதுடன் மட்டும் நிற்காமல் ஜனாதிபதியையும் நேரடியாக கண்டு பேசியுள்ளனர்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இது பற்றி பாராளுமன்றில் கல்முனையில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உண்டு என்றும் இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்ற வார்த்தையுடன் அடங்கிவிட்டார், இது பற்றி நல்லாட்சி காலத்தில் எத்தனையோ கலந்துரைடாடல்கள் நடைபெற்று அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்த நிலையில், ஹக்கீம் மீண்டும் பழைய பல்லவி பாடாது எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்து கல்முனையை இனரீதியாக துண்டிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், தமிழ் மக்களுக்கு பாண்டிருப்பு செயலகத்தை வழங்கலாம் என்பதையும் வலியுறுத்த வேண்டும், என்றார்.
