கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு

இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன.

இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

இதுதொடர்பாக சைபர் குற்ற காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இவ்வாறான மோசடிகளை நம்பி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே வருகின்றது.

அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு என்ற ஒன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 இலட்சத்தை இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் இடம்பெற்றுள்ளது. புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார்.

இவர் ஒன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு தருகிறேன்.

அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறியுள்ளார்.

இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி இலக்கத்திக்கு தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர்.

மேலும், பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர்.

பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் ஒக்டோபர் 23  வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 இலட்சம் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அவர் அழைத்தபோது தொலைபேசி எண் செயற்பாட்டில் இல்லை. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்தோடு, இதுபோன்ற ஒன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் சைபர் குற்ற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.