‘கபுடு காக்கா’ பாடலால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் விடுதலை

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின போது முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை குறித்து பாடப்பட்டு பிரபலமான பாடலான ‘கபுடு காக் காக் காக்’ பாடலுக்கு வாகன ஹார்னை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவை, வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.எஸ்.பிரபாகரன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடலில் பாடலுக்கு விசில் அடித்ததற்காகவும், ஒலி எழுப்பியதற்காகவும் சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்ன, கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி, குற்றச்சாட்டை உருவாக்கும் போது பக்கச்சார்பான முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கோட்டை பொலிஸாரை எச்சரித்ததுடன், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சட்டத்தரணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான, சாலிய பீரிஸ், சரத் ஜயமான்ன, சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியிருந்தது.

சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்ன, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக தனது வாகனத்தின் ஹார்னை ஒலிக்கச் செய்ததாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் தங்கள் நடவடிக்கைகளின் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்பது உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.