கஜ்ஜா கொலை வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு நேரடித் தொடர்பு -பொலிஸார்

மித்தெனிய பிரதேசத்தில் அருண விதானகமகே என்ற கஜ்ஜாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரதான சந்தேகநபரான திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் பெக்கோ சமனின் நெருங்கிய சகாவான சம்பத் மனம்பேரிக்கு நேரடித் தொடர்பு உள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கஜ்ஜாவை கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிதாரியான ரொஷான் மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் எனவும் சம்பத் மனம்பேரியின் தனிப்பட்ட வேலைகளிலும் ரொஷான் உதவியுள்ளார் என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கஜ்ஜாவைக் கொல்ல உதவிய ஜீவன் என்பவர், ஒரு காலத்தில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான பேருந்தில் பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கியை, கொலை நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் சம்பத் மனம்பேரி ஒருவரிடம் கொடுத்தமையும் முன்னதாக அம்பலமாகியிருந்தது.

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்களை மறைப்பதிலும் சம்பத் மனம்பேரி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த இரசாயனப் பொருள்களை ஏற்றி வந்த கொள்கலன்களை மறைப்பதற்காக, சம்பத் மனம்பேரியின் சகோதரியினது வீட்டைச் சுற்றி ஒரு உயரமான மதில் கட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மதில், கொள்கலன்கள் மித்தெனியவுக்கு வந்த சில மாதங்களிலேயே கட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.