ஓமந்தையில் காணி பிணக்கு காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை!

-வவுனியா நிருபர்-

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசிவிட்டு, அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று பிள்ளைகளின தந்தையான திலீபன் (வயது 42) படுகாயமடைந்த நிலையில் உறவனிர்கள் மற்றும் ஊர் மக்களால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.