
ஒன்றாக மதுபானம் அருந்திய நண்பன் கொலை : மட்டக்களப்பில் சம்பவம்!
மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மூன்று பேர் சேர்ந்து பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த புவனேந்திரராசா (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த புவனேந்திரராசா சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
இதன்போது நால்வருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நண்பர்கள் மூவரும் புவனேந்திரராசாவை பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த வயல்பகுதிக்கு மாலை வேளையில் சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.