
ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 9 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் 9 குற்றவாளிகளுக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே பிணை வழங்கப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிரித்தலை இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
லெப்டினன்ட் கேணல் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன, ஆர்.எம்.பி.கே. நாடன் எனப்படும் ராஜபக்ச, டபிள்யூ.டபிள்யூ. பிரியந்த திலஞ்சன் உபசேன என்ற சுரேஸ், எஸ்.எம். ரஞ்சி எனப்படும் ரவீந்திர ரூபசேன, வை.எம். சமிந்த குமார அபேரத்ன, எஸ்.எம்.கனிஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், டி.ஜி.டி. பிரசாத் கமகே மற்றும் டி.ஈ.ஆர். பீரிஸ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாவார்கள்.
