
ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி நுவான் துஷார நீதிமன்றில் வழக்கு!
2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு கோரி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நுவான் துஷார தனது மனுவில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ முதலியத்தே மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஐபிஎல் தொடருக்காக இவர் ‘ரோயல் சேலஞ்சர்ஸ்’ அணியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியுடன் அவர் இத்தொடரில் பங்கேற்றுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதி தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, 2026 ஆம் ஆண்டிற்கான தடையின்மைச் சான்றிதழை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2026 மார்ச் 31 உடன் முடிவடைவதாகவும், அதனைப் புதுப்பிக்காமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் முடிவை ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளதாகவும் துஷார குறிப்பிட்டுள்ளார்.
தனது தற்போதைய உடற்தகுதியானது கடந்த காலங்களில் பேணப்பட்ட அளவிலேயே இருப்பதாகவும், அதே உடற்தகுதி மட்டத்திலேயே கடந்த ஆண்டுகளில் தனக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், ஐபிஎல் அணியில் தனக்குப் பதிலாக வேறொரு வீரர் நியமிக்கப்படுவார் என்றும், இதனால் தனக்குக் கிடைக்க வேண்டிய பாரிய வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பறிபோகும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மேலதிக விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
