ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நாகர்கோவில் எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புதிதாக புனரமைக்கும் பணியை வடமாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959 ஆம் ஆண்டு காலப் ஒரு நீர்ப்போக்குவரத்து பாலமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாரிகாலம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாரிகாலம் முடிவடைந்தும் சிலமாதங்களாக சுமார் 6 மாதங்கள் குறித்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் பயன்படுத்த முடியாது நிலை காணப்படுவது வழமையாக இருந்தது.

இந்நிலையில் அண்மைய வருடங்களில் பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று கூறி பல வருடங்களாக குறித்த பாலத்தை அமைக்க தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக குறித்த பாலம் புனரமைப்பு பணி தடைப்பட்டுக் கொண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட தொடர் அழுத்தங்கள் மற்றும் முயற்சிகளால் குறித்த பாலத்தை புனரமைப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது.

இந்நிலையிலேயே வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி ஏற்பாட்டில் வடமாகாண ஆளுநர் வேதநாயகனால் குறித்த பாலம் புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்த முடியாமை காரணமாக சுமார் 7 கிலோமீற்றர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்க்கு மருதங்கேணி, புதுக்காடு ஊடாக சுமார் 40. கிலோமீற்றர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்

இந்நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி, பகுதி கிராம சேவையாளர், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், துறைசார் பொறியியலாளர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.