ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சுமார் 3,50,000 இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா குரே விசேட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இலங்கைத் தூதரகம் நேரடித் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

தற்போதைய பதற்ற நிலை காரணமாக இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்காகத் தூதரகம் விசேட உதவிச் சேவையை அமைத்துள்ளது.

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போக்குவரத்து, பாதுகாப்பு இடங்கள் மற்றும் விமான நிலையங்கள் குறித்த தகவல்களை அபுதாபி தூதரகம் மற்றும் துபாய் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கங்கள் ஊடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் அல்லது அங்கிருந்து வெளியேறத் திட்டமிடுபவர்கள், தத்தமது விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.