எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

பதுளை, எல்ல – வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த இடங்கள் தொடர்பில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ் .எஸ் .ஹேன்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வீதிகளின் இருபுறங்களையும் பாதுகாப்பான முறையில் மீளக் கட்டமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் 26 கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி மீள்கட்டமைக்கப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் , பதுளை மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க 700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள்தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.