எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றும் தற்காலிக விடுமுறை

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாராந்த விசேட விடுமுறை இன்று புதன்கிழமை நடைமுறையிலுள்ளது.

எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல்,போக்குவரத்து சேவைகள் ,துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து,சுகாதார சேவைகள் , பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் ஆகிய அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்கும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அறிவிக்கப்பட்ட இந்த பொது விடுமுறை நாட்களில், அந்தந்த துறைகளின் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும், அவசியமான சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது அரச துறைகளில் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.