எச்சரிக்கை : அரகலயா வீடியோக்களைப் பகிர்ந்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான தவறான வீடியோக்களை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வாகன சோதனைகள் மற்றும் 2022 மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காட்சிகள் என தீவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீடியோக்கள் கடந்த கால நிகழ்வுகளை நடப்பு நிகழ்வுகளாக காட்டி தவறான கதையை உருவாக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்கரிக்கை விடுத்துள்ளனர்.