
ஊசி செலுத்திய பின் உடல் நீலமாகி துடிதுடித்து உயிரிழந்த யுவதி!
வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதிக்கு இரண்டு ஊசி போடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுகன்னாவை பொத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த சாமுதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஏழாவது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
காலை தாதி ஒருவர் குறித்த யுவதிக்கு இரண்டு ஊசிகள் செலுத்திய போது அவர் வலியால் அலறி துடித்ததாகவும், பின்னர் கழிவறைக்குச் சென்று வாந்தி எடுத்து, பின்னர் உடல் நீலமாகி, கைகால்கள் நீலமாகி சிறிது நேரத்தில் உயிரிழந்ததாகவும் அவரது தாயார் மாயா இந்திராணி தெரிவித்தார்.
இதன்படி, யுவதியின் மரணம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுவதியின் சடலம் தொடர்பில் தடயவியல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
