உழவு இயந்திரம் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை பலி

-திருமலை நிருபர்-

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (வயது -39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது உழவு இயந்திரத்தில் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.