உறங்கி கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை
-அம்பாறை நிருபர்-
முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் ஒருவரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் அதிகாலை வேளை 3 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி விட்டு முகமூடி அணிந்த நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர்.
இதன் போது கல்முனை பிரதேச நகைக்கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை திருடப்பட்ட நகை மீட்கப்பட்டுள்ளதுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்