உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம்
-கிண்ணியா நிருபர்-
கல்வி அமைச்சின் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சினுடைய உயர் கல்விப் பிரிவின் 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காது, பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பொது அறிவு பரீட்சையில் 30 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களை இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 18 தனியார் பல்கலைக்கழகங்களில், இலங்கை அரசின் அனுமதி பெற்ற இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் கல்விக் கடன் திட்டத்தின் ஊடாக, அதாவது வட்டியில்லாக் கடன் திட்டத்தின் ஊடாக அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பினை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டமே இதுவாகும்.
இதன்போது மாணவர் கடன் பிரிவு உதவிப் பணிப்பாளர் கே.வி.எம்.சதுரங்கனி, அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு உதவிப் பணிப்பாளர் சஜினி விஜேசிறிவர்தன, திறன் மற்றும் தொழிற்கல்விப் பிரிவு மாவட்ட இணைப்பாளர் கே. மதுரன், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
