உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மன்னார் மாவட்டம்

மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் அந்தோணி பிள்ளை பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னி மண் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் அதி உயர் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் அந்தோணி பிள்ளை பத்திநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி முறை சார்ந்த நிகழ்வுகளுக்கு நான் அழைக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.சுமார் கடந்த 6-1/2 வருடங்களாக வடமாகாணத்தில் இருந்து கொண்டு மாகாணத்தின் கல்வித்துறையை உயர்த்துவதற்காக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து கடமையாற்றிய தன் நிமிர்த்தமாக இன்று மன்னார் மாவட்டத்தினுடைய கடந்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதாரண தரத்தில், உயர்தரத்தில் மன்னார் மாவட்டத்தில் இரண்டு கல்வி வலயங்களும், முன்னோக்கி இருப்பது கண்கூடாக தெரிகிறது.

மாகாணத்தின் நிலமையும் சற்று உயர்ந்துள்ளமையை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த வெற்றியை பெற்ற மாணவர்கள், கை கொடுத்த ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் , பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனவே இந்த மாணவர்களின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட வன்னி மண் அறக்கட்டளைக்கு மாவட்டம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர், மடு பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் , அனர்த்த முகாமைத்துவ உதவி திட்ட பணிப்பாளர் , மன்னார் நகர சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், சாதனை படைத்த மாணவர்கள், பெற்றோர்கள், வன்னி மண் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு வன்னி மண் அறக்கட்டளையால் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.