உக்ரைன் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் ஓடும் ரஷ்யப் படைகள்?

உக்ரைன் கார்கிவ் பகுதியில் கடந்த வாரம் ஒரு எதிர் தாக்குதலை உக்ரைன் ராணுவம் தொடங்கியதில் ரஷ்ய இராணுவம் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் ரஷ்யாவிடம் இழந்த சில நிலங்களை மீட்டெடுத்துள்ளது. ரஷ்ய படைகள் சண்டையிடுவதை விட ஆயுதங்களைவிட்டு தப்பி ஓடுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் சமீபத்திய கவனம் கார்கிவ் பகுதியில் உள்ளது, என Associated Press (AP) தெரிவித்துள்ளது.

இங்கு கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரத்தை சரமாரியான தாக்குதலில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது.

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.

அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பித்து ஓடினர்.

மேலும் ரஷ்யப் படைகள் சென்றமையால் வெர்பிவ்காவில் ரஷ்ய வீரர்களால் கட்டப்பட்ட சோதனைச் சாவடியைக் கடந்து மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா என மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவி மற்றும் ஆயுதங்களின் பெருமளவிலான வருகையால் உக்ரைன் ஆதரிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில்தான் அமெரிக்கா கூடுதல் 2.7 பில்லியன் டொலர் உதவி மற்றும் ஆயுதங்களை அனுமதித்தது, இதன் மூலம் உக்ரைனுக்கான மொத்த அமெரிக்க உதவித் தொகை தோராயமாக 13 பில்லியன் டொலராக உள்ளது.

இதேவேளை ரஷ்யா பாதுகாப்பு படை வட்டாரங்களின் தகவல்படி பின்வாங்குவது போர் தந்திரம் என்று தெரிவித்துள்ளன.

அடுத்த சில வாரங்களில் உக்ரைன் இராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தற்போது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளோம்.

எம்.ஐ.-35 ஹெலிகொப்டர், சுகோய் 35 போர் விமானங்கள் அதிக அளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கார்கிவ் பகுதியில் இருந்து உக்ரைன் ராணுவம் துடைத்தெறியப்படும், என ரஷ்ய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.