இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

-அம்பாறை நிருபர்-

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிகாட்டலின் கீழ் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இச்சிரமதான நடவடிக்கையின் போது கல்முனை மாநகரசபையும் பொலிஸாருடன் இணைந்து கொண்டதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் அகற்றி சுத்தப்படுத்தி பள்ளிவாசல் வளாக சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சிரமதான நடவடிக்கையின் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்,  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச்சிரமதான நடவடிக்கையின் போது விச ஜந்துக்கள் அழிக்கப்பட்டன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணிஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்