
இலங்கையில் இருந்து இஸ்லாமிய குடும்பம் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!
-அம்பாறை நிருபர்-
இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர், அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர், என மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ்
(வயது 43), மனைவி பாத்திமா பர்ஹானா (வயது 34), இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய ஐவருமே இவ்வாறு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு, தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வந்து இறங்கினர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், முஹம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்கு பலரிடம் கடன் பெற்று, திருப்பி கொடுக்க முடியாததால், வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக, தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை முஸ்லிம்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.