
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெருகல்
-மூதூர் நிருபர்-
மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளிலுள்ள பல வீடுகள் 2ஆவது நாளாக இன்றும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறது.
மேலும் வெருகல் பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் இடம்பெயர்ந்து வெருகல் மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை பகுதியில் இரண்டாவது நாளாக நீர் பிரவாகம் காணப்படுகிறது.இதனால் இவ் வீதியூடாக பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காணமுடிகிறது.
வெருகலிலுள்ள இலங்கைத்துறை – முத்துச்சேனை வீதியிலும் நீர் பிரவாகம் காணப்படுவதால் மக்கள் சிரமங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் நேற்றைய தினத்தை விட இன்று வெள்ள நிலமை சற்று குறைவடைந்துள்ளது.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வெருகல் பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்