இம்ரான் கானின் விடுதலைக்காக இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக, மனிதாபிமான அடிப்படையில் மேன்முறையீடு ஒன்றைச் செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை,  பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, காவலில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து மேற்கோள் காட்டி, ஒத்திவைப்பு பிரேரணையை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் கையளித்துள்ளார்.

காவலில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் நலன் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவருக்கு முறையான மற்றும் சுயாதீனமான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இராஜதந்திர மற்றும் நாடாளுமன்ற ரீதியிலான தொடர்புகள் ஊடாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அவரது விடுதலை அல்லது சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு இணங்க அவருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து இலங்கை குரல் கொடுக்க வேண்டும் என பிரேரணை வலியுறுத்துகிறது.

1992 உலகக் கிண்ணத்தை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த இம்ரான் கான், இலங்கை உட்பட அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடையே நன்மதிப்பைப் பெற்றவர்.

அவரது விளையாட்டுத்துறை பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இலங்கை மக்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தின் நல்விருப்பத்தை பாகிஸ்தானுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவு குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்விதப் பதிலும் வழங்கவில்லை.