
இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்,
இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் நிதி விடயங்கள் குறித்து எவரையும் நம்ப வேண்டாம் என அவர் மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகள், மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளைக் கையாள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு (CPU) முழுமையாகத் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விசாரணைகளை வலுப்படுத்தவும் பொதுமக்களை எச்சரிக்கவும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
