ஆயுதங்களுடன் 9 சந்தேக நபர்கள் கைது

பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய திடீர் தொடர் சோதனைகளைத் தொடர்ந்து, திட்டமிட்ட கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வட்டுமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டை சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை செய்தனர், அங்கு ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், மூன்று மகசின்கள், ஒரு வேன், ஒரு கார் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி என்பவற்றை அதிகாரிகள் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 22 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்கள் காலி, அனுக்கனே, உடுகம்பல மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

விசாரணையின் போது வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உடுகம்பலவைச் சேர்ந்த 22 மற்றும் 57 வயதுடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் மற்றொரு குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில் குருநாகல் முகாமைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் ஹெட்டிபொலவைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரை கைது செய்தனர், குறித்த சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களுக்கும் இடையேயான இணைப்பாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. அவரிடமிருந்து நான்கு கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர், இதுவரை அவர்களில் இருவர் வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.