
ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம்
அமரத்துவம் அடைந்த மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி தற்போது மட்டக்களப்பு மறைமாவட்ட புளியந்தீவு புனித ஜோசப்வாஸ் சபை புனித மரியாள் பேராலயத்தை வந்தடைந்து அங்கு ஆராதனைகள் இடம்பெறுகின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை 73 வயதில் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் காலமானர்.அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 21 ம் திகதி புனித மரியால் பேராலயத்தில் விசேட அஞ்சலி ஆராதனையின் பின்னர் ஆலைய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, தன்னாமுனை ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்த யோசப் பொன்னையா புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டு பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.இதனை தொடர்ந்து (1993-96) மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் பணியாற்றிய பின்னர் (1996-2001) அம்பிட்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.2008 பெப்ரவரியில் திருகோணமலை- மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார். பின்னர் 2012 மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர் கடந்த வருடம் சுகயீனம் காரணமாக ஓய்வு நிலைக்கு சென்ற நிலையில் இன்று இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.