அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர்: பணத்தை மீளப்பெற நடவடிக்கை

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை Online ஊடாக தரவு கட்டமைப்பில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக தகுதி பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கும் ஜூன் மாதம் முதல் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவிற்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.