
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளிகளின் பட்டியல் வெளியீடு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர்ப் பட்டியல் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்தக் குறித்த பெயர்ப் பட்டியல்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் காணப்படின், அவற்றை பின்வரும் முறைகளில் சமர்ப்பிக்க முடியும்.
இணையவழியாக: https://eservices.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள் மூலம்: www.wbb.gov.lk இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அந்தந்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொண்டோ, அதனைப் பூர்த்தி செய்து உரிய பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பிரதேச செயலகங்களில் உள்ள நலன்புரிப் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடனோ அல்லது பிரதேசத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிலையங்கள் ஊடாகவோ இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் 2026 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒருவர் ஒரு மேன்முறையீட்டை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
தகுதியற்ற நபர்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க முடியும். இத்தகைய ஆட்சேபனைகளை அநாமதேயமாகவும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிரதேச செயலகத்தை அல்லது கிராம உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
