அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி போலி விசா விநியோகம்

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று வியாழக்கிழமை கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கண்டியில் இயங்கி இந்த நிறுவனம், அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து 3.5 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின்போது, இந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய கம்பளை மற்றும் தலத்துஓயா பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது அங்கிருந்து 7 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பல பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் இன்று வெள்ளிக்கிழமை கண்டி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பணம் செலுத்துவதற்கு முன்னர், குறித்த நிறுவனம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.slbfe.lk) ஊடாகவோ அல்லது 1989 என்ற அவசர இலக்கம் மூலமாகவோ உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.