அரையிறுதிக்கு இலங்கை முன்னேற்றம்
சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த 3ஆவது கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை- தாய்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து துடுப்பாட்டம் தேர்வு செய்து விக்கெட்டுகளை இழந்து 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் பெற்றுகொண்டது. இதன்போது அதிகபட்சமாக சுத்திருவாங் 31 ரன் பெற்றுக்கொண்டார்.
இலங்கை தரப்பில் இனோஷி பிரியதர்ஷினி 4 விக்கெட்டும் அட்டப்பட்டு, தில்ஹாரி, சுகந்திகா குமாரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 79 ஓட்டங்கள் இலக்குடன் விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய அத்தப்பத்து 27 ரன்னிலும், அனஷ்கா சஞ்சீவனி 32 ரன்னிலும் பெற்று கொண்டனர்.
இதன் போது இலங்கை அணி 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
4ஆவது மற்றும் கடைசி கால் இறுதியில் பங்களாதேஷ்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி நாளைமறுதினம் ஞாயிற்று கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும். அன்றைய தினம் நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.