
அரச பேருந்துகள் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனை
மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று புதன்கிழமை காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளது.
மக்களினால் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை அரச பேரூந்து ஒன்று நகர சுற்றுவட்ட பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட போது பிரேக் லைட் ஒளிராத நிலை காணப்பட்டது.
இதன் போது குறித்த பேரூந்தின் ஆவணங்களை சரி பார்த்த போதும் ஆவணங்கள் இருக்காத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் தண்டம் விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் சில மணி நேரம் காத்திருந்தமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில பேருந்துகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் காணப்படாத நிலையில் பிரேக் லைட் ஒளிராத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் பயணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்வோர் என பலரும் தாமதங்களை எதிர் கொண்ட நிலையில் மன்னார் சாலை அதிகாரிகள் வருகை தந்து பொலிஸாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் பேருந்துகளின் பிரேக் லைட் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு பொலிஸாரினால் வலியுறுத்தப்பட்டது.

