அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில்

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தீர்மானித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவனத் தலைவரின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் அதிகாரிகளை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக இணைக்க தேவையான அதிகாரங்கள் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில்  இவ்வாறான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.