அம்பிட்டிய தேரரை கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள் – மனோ கணேசன்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார்.

இவரை ICCPR (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடை மனநல மருத்துவமனையில் அடைக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

“ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் அரசாங்கம் கைது செய்தது.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப் போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது.

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ளுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் காவல்நிலையத்தில் முறைபாடு செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.

அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறையாகும்.

இதைவிடுத்து சண்டியன் போன்றும், மனநோயாளி போன்றும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன் என்று ஹிஸ்டீரியாகாரனாக (hysteria) கூக்குரல் இடுவது எந்த வகையில் நியாயம்?

தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள்.

மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை துர்வார்த்தைகளில் வசைபாடுகிறார். அப்படியானால், இவர் யார்?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்