அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

-அம்பாறை நிருபர்-

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, உகண பகுதி திஸ்ஸபுர 21 கிராமத்திலிருந்து, அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாயக்கிழமை இரவு, அம்பாறை டி.எஸ். சேனநாயக்க சந்திப்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, மற்றுமொரு சந்தேக நபர் இரவு 10.00 மணியளவில், அம்பாறை பாலிகா சந்தியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2101 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 8757 மில்லிகிராம் ஐஸ் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.

இந்த போதைப்பொருள் உகண 21 திஸ்ஸபுர பகுதியிலிருந்து அம்பாறைக்கு கடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் தலைமையில், அம்பாறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் ஒருங்கிணைப்பில், அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல கே. ஹேரத் தலைமையிலான பொலிஸார் இச் சோதனையை நடத்தினர்.