அம்பாறையில் தங்கச் சங்கிலி திருட்டு தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை பொலிஸ் பிரிவில் பதிவான பல தங்கச் சங்கிலி திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் கைது செய்துள்ளனர்.

27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் வாவின்ன மற்றும் பரகஹகெலே பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இகினியாகல பொலிஸ் பிரிவின் அலிஒலுவப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இருவரும் கைது செய்யப்பட்டதுடன், விசாரணையின் மூலம் அம்பாறை, இகினியாகல மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட நான்கு தங்கச் சங்கிலிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் போதைப் பொருள் பழக்கத்தினால் இத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இரு சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.