
அம்பாறையில் கசிப்புடன் இளைஞன் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சூட்சுமமான முறையில் மறைத்திருந்த கசிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சூட்சுமமான முறையில் மறைத்திருந்த 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீரமுனை 2 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.