
அதிகரித்த வரி அறவீட்டுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
அதன்படி இதுவரை காலமும் 1500 ரூபா வரி மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம் 7500 ரூபா வரியாகவும் 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைச்சி பிரதேச சபையால் 2021 ஆம் ஆண்டு விலை மதிப்பீட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்கமைவாக விலை மதிப்பீடு செய்யப்பட்டே அதிகரித்த வரி அறவிடப்படுவதாக கரைச்சி பிரதேச சபையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது சட்டரீதியானது எனவும் இதனை மேற்கொள்ளாதுவிடின் கணக்காய்வு விசாரணைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.



