அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்டியுள்ள தெற்கு ஆந்திரா – வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதன்கிழமை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை வியாழக்கிழமை அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.

மேலும் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் 23 ஆம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அடுத்த 12 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.’ என தகவல் வெளியிட்டுள்ளது.