
அடுத்த இரு வருடங்களுக்குள் முழுமையாக மீளலாம் – மொட்டின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
-கல்முனை நிருபர்-
அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலமாக அடுத்த இரு வருடங்களுக்கு இடையில் கஷ்ட நிலைமையில் இருந்து முழுமையாக மீள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஆலையடிவேம்பில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இது நாட்டுக்கும், மக்களுக்கும் மிகவும் கஷ்டமான காலம்தான். இந்நிலைமைக்கு அரசாங்கத்தின் மீது பழியை போட்டு குறை கூறி கொண்டே இருப்பதால் எந்த தீர்வும் வானத்தில் இருந்து வந்து விட போவதில்லை.
ஆனால் அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் எதிர்வரும் இரு வருட காலங்களுக்குள் முழுமையாக மீட்சி பெறலாம் என்பது திண்ணம் ஆகும்.
விவசாய உறவுகளுக்கு வெகுவிரைவில் நற்செய்தி ஒன்று கிடைக்கும். அதாவது எதிர்வரும் பத்து நாட்களை அண்டி யூரியா உரம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும்.
இதில் எந்தவித முறைகேடுகளும் இடம்பெற கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
ஏதேனும் முறைகேடுகள் இடம்பெறுகின்ற பட்சத்தில் அதிகாரிகளுக்கும், எமக்கும் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உண்மையிலேயே பெருங்கவலை தருகின்றது.
என் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கூட எரிபொருள் நெருக்கடிக்கு உட்பட்டு அந்தரிக்கின்றோம் என்பதும் உண்மையே.
ஆனால் கூடுமான விரைவில் எரிபொருள் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படும். அதே போல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ரொக்கெற் வேகத்தில் ஏறி நிற்கிறன.
அதற்கும் உரிய தீர்வு பெற்று தரப்படும். மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். இறைவனை பிரார்த்திக்க வேண்டும். இன, மத, மொழி பேதங்களை கடந்து நாட்டு பற்றாளர்களாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு இதய சுத்தியுடன் செயற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது, என்றார்
