
அக்கரைப்பற்றில் மாசி சம்பலில் அதிகளவான அமிலப் பதார்த்தம் கலந்து விற்பனை!
அக்கரைப்பற்று பகுதியில், மாசிச் சம்பலில் 230 மில்லி கிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், குற்றவாளிகளை கடுமையாக எச்சிரித்து விடுவித்தார்.
அக்கரைப்பற்று கடற்கரை வீதியிலுள்ள கடை ஒன்றை முற்றுகையிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அங்கு பிளாஸ்டிக் கப் ஒன்றில் விற்பனைக்காக அடைத்து வைத்திருந்த மாசி சம்பலை கைப்பற்றி, அதனை அரச உணவு பகுப்பாய்வு திணைக்களக்திற்கு அனுப்பியதையடுத்து, அதில் அளவுக்கு அதிகமாக மனித பாவனைக்கு கேடுவிளைவிக்க கூடியளவு 230 மில்லிக்கிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தம் கலந்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மாசி சம்பலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் அதனை உற்பத்தி செய்து வழங்கிய கல்முனையைச் சேர்ந்த உற்பத்தி நிறுவன உரிமையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக, 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுக் கட்டளைச் சட்டத்தின்பிரிவு 13(1) இன் கீழ் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, குறித்த இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு, எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கைளை மீளவும் செய்தால் உற்பத்தி உரிமம் இரத்துச் செய்யப்படும், என குற்றவாளிகளை நீதவான் கடுமையாக எச்சரித்து விடுவித்தார்.
