வாகனத்திற்குள் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

திருகோணமலையில் காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த செல்லையா ஜெயரூபன் (42 வயது) என தெரிய வந்துள்ளது.

மரக்கறி கடை ஒன்றின் உரிமையாளராக குறித்த நபர் கடந்த 12ம் திகதி கெப் வாகனத்துடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நபரின் வாகனம் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் வில்கம் விகாரை பகுதியை தாண்டி மொரவெவ பகுதிக்கு செல்வதை சிசிடிவி காணொளி மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பம்மதவாச்சி என்ற பகுதியில் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் வீதியூடாக பொலிஸார் சென்ற போது அங்கு அவ்வழியில் கெப் ரக வாகனத்தின் முன் கண்ணாடி ஒன்று உடைந்த நிலையில் விழுந்து கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து அவ்வழியின் ஊடாக சென்று பார்த்த போது EP DAC-9245 என்ற இலக்கமுடைய கெப் வாகனத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்