மின்வெட்டு நேரம் அடுத்தவாரம் மேலும் அதிகரிக்கும்

அடுத்த வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற மின் ஆலைகள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சகம் தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் எச்சரித்தன.

இதேவேளை இந்திய கடன் வரியின் கீழ் நாளை வரவுள்ள டீசல் கப்பலில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்திக்காக LIOC இலிருந்து 6000 MT டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.