மனிதநேயத்தின் அடையாளம் தமிழர்கள் : இலங்கை மக்களுக்கு கைகொடுக்கிறது தமிழக அரசு

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மனித நேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் விளங்குகிறது எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்