மண்ணெண்ணெய் வரிசையில் மீண்டும் ஒரு மரணம்

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 80 வயதுடைய முதியவர் உயிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அளவெட்டி – மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் சில மணி நேரத்தில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என ஊழியர்கள் அறிவித்ததையடுத்து நேற்று சனிக்கிழமையும் அவ்வாறு வரிசையில் சென்று காத்துக்கொண்டிருந்துள்ளார்.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிந்துவிட்டது என கூறியுள்ளனர்.

அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர், மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.