சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்த தடை!
சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதற்கு இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கையொப்பத்துடன் அண்மையில் வெளியிடப்பட்டது.
1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டம் தொடர்பான உணவு பொதியிடல் மற்றும் விளம்பரப்படுத்தல் உத்தரவு உள்ளிட்ட பல உத்தரவுகள் புதிய வர்த்தமானி ஊடாக திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் குழந்தைகளுக்குப் பால் சார்ந்த உற்பத்திகளின் விளம்பரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
உணவு தொடர்பில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கர்ப்பிணித் தாய்மார் அல்லது பாலூட்டும் தாய்மார், குழந்தை அல்லது 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தோன்றும் காணொளி அல்லது படங்களை அச்சு, இல்லத்திரனியல் ஊடகங்கள் அல்லது வேறு வகையில் விளம்பரப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனுமதியின்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ 12 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு, குறிப்பிட்ட உணவுடன் வழங்கப்படும் துண்டுப்பிரசுரம், இலவசமாக வழங்கப்படும் மாதிரிகள், பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், கார்ட்டூன் பொருட்கள் ஊடாக அல்லது பிரபலமான நபர்களைக் கொண்டு உணவு தொடர்பான விளம்பரப்படுத்தல்களை முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.