சாம்பல் தீவுப் பகுதியில் எரிந்த நிலையில் தோட்டாக்கள் மீட்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து ஒரு தொகுதி பழைய தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட
முறைப்பாட்டை, அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர் .

நிலாவெளி, சாம்பல் தீவு வீதியில் சல்லி கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர், தனது காணியை  கூலி ஆட்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே கருகிய நிலையில் பழைய தோட்டாக்கள் அடங்கிய பையொன்று இருப்பது தெரிய வந்ததாகவும், இது குறித்து அருகில் உள்ள கடற்படை தளத்துக்கு அறிவித்ததாகவும் தெரிய வருகின்றது .

இதனை அடுத்து, கடற்படையினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொலிஸாருக்கு குறித்த தகவலை முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்று அதனை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரி56 துப்பாக்கி தோட்டாக்கள் 245, ரேஷர் துப்பாக்கி வெற்று தோட்டாக்கள் 03, எம்.பி.எம்.ஜி துப்பாக்கி தோட்டாக்கள் 06 என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

இந்த வெடிபொருட்கள் குறித்து திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.