காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதை சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது!

-யாழ் நிருபர்-

 

காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கடற்பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை நிறைவுற்ற நிலையில் இன்று திங்கட்கிழமையில் இருந்து வழமையான நேர அட்டவணையின்படி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த கடற்பாதையானது பல தடவைகள் கோளாறுக்கு உள்ளாகி திருத்தம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.